முதல் முறையாக பெண் உயிர் இழப்பு..! தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு.
கொரோனாவால் தமிழகத்தில் இன்று மூன்றாவது உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் நோயாளி(53) அதிக மூச்சு திணறல் காரணமாக உயிர் இழந்துள்ளார்.
தமிழகத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா வைரஸ் டெல்லி மாநாடு விவகாரத்திற்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது வரை தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிவிட்டனர்.
இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயது நபர் முதன்முதலில் உயிரிழந்தார். இதனை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 51 வயது ஆண் இன்று காலை 7 மணி அளவில் உயிர் இழந்தார்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவரின் மனைவிக்கும் கொரோனா உறுதியான நிலையில், அவர் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று பிற்பகல் 2.25 மணியளவில் மூச்சுத்திணறல் அதிகமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இன்று ஒரே நாளில் இரண்டு பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். மொத்தம் 3 பேர் உயிர் இழந்துள்ள நிலையில் இவரே உயிர் இழந்த முதல் பெண் நோயாளி ஆவார்.