ஜப்பானை மிரட்டும் டெல்டா வகை கொரோனா.! டோக்கியோ ஒலிம்பிக்கில் என்ன பாதிப்பு.?
ஜப்பானை மிரட்டும் டெல்டா வகை கொரோனா.! டோக்கியோ ஒலிம்பிக்கில் என்ன பாதிப்பு.?
ஜப்பான் தலைநகர் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது ஜப்பான் அரசு.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகரமான டோக்யோவில் 2020ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில், ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் தொடர் துவங்க உள்ளது.
இப்போட்டிகள் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், அங்கு கொரோனா பரவல் காரணமாக அவசர நிலையை பிறப்பிப்பதாக அந்நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு 15 நாள்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அவசரநிலையின்போது உணவகங்கள், மதுபான விடுதிகளை இரவு 8 மணிக்கு மூடுதல், அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்த்தல் போன்ற நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுவாா்கள். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு நடத்திய ஆலோசனையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு அனைத்து போட்டிகளையும் பார்வையாளர்களின்றி நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் ஜப்பானிலும் வேகமெடுத்துள்ளது. நேற்று மட்டும் அங்கு 896 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை தினந்தோறும் 2,000 என்ற அளவில் உயரக்கூடும் எனவும் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாகவே டோக்யோவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.