ஏரியில் பிணமாக கிடந்த பெண்; தகாத உறவிற்கு மறுப்பு தெரிவித்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயலா?

ஏரியில் பிணமாக கிடந்த பெண்; தகாத உறவிற்கு மறுப்பு தெரிவித்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயலா?



nurse murder in vellore

வேலூர் மாவட்டம் கீழ்மொணவூர் திருமால் நகர் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவரது மனைவி அனிதா சதுப்பேரி ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதிரேசன் மற்றும் அனிதாவிற்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனிதா வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். கதிரேசன் ஒரு ஆட்டோ டிரைவர்.

நேற்று முன்தினம் முதல் அனிதாவை காணவில்லை. அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில் நேற்று வேலூர் அருகே உள்ள சதுப்பேரி ஏரியில் மர்மமான முறையில் அனிதா இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அனிதாவின் முகத்தில் காயங்கள் இருந்தது. அவரது உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

nurse murder in vellore

இது குறித்து அனிதாவின் கணவர் கதிரேசன் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் அஜித்குமார் மீது புகார் அளித்துள்ளார். அதில் தனது மனைவியை அஜித்குமார் தான் கடத்தி கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனிதாவுக்கும் பைனான்சியர் அஜித்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாகவும் அவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசிவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தீபாவளி அன்று அனிதா, அஜித்குமாருடன் போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த கதிரேசன் அனிதாவிடம் இருந்து செல்போனை பறித்து அவரை கண்டித்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று மாலை கதிரேசன் ஆட்டோ ஓட்ட சென்று விட்டதால் அவர் வீட்டில் இல்லாததை அறிந்த அஜித்குமார் அனிதாவின் வீட்டுக்கு வந்துள்ளார். கணவருக்கு எல்லாம் தெரிந்து விட்டதால் கள்ளக்காதலை விட்டுவிடலாம் என அனிதா அஜித்குமாரிடம் கூறியதாகவும் இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அஜித்குமார் அனிதாவை அடித்துள்ளார். பின்னர் அவரை ஏரிக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்காதலன் அஜித்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.