"தவறு..மீண்டும் நடக்காது" பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட உதயநிதி ஸ்டாலின்!
"தவறு..மீண்டும் நடக்காது" பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட உதயநிதி ஸ்டாலின்!
ஒரே நாளில் 100 ரசிகர் மன்றங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் தி.மு.க தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தான் அவரது மகனான உதயநிதி அதிக நிகழ்ச்சிகளில் தலைகாட்ட ஆரம்பித்தார்.
உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தி.மு.க நிர்வாகிகள் அதிகம் செலவு செய்ய ஆரம்பித்தனர். பிரமாண்ட கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டன. உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அவரது புகைப்படத்துடன் தி.மு.கவினர் பேனர்கள் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தி.மு.கவில் முக்கிய பொறுப்பை பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சரியான நேரத்தை பார்த்து ஸ்டாலினும் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ரசிகர் மன்றங்கள் மூலம் தனக்கு என ஆதரவு வட்டத்தை உருவாக்க உதயநிதி செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 100 ரசிகர் மன்றங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. விழாவினை ஏற்பாடு செய்திருந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் அவருக்காக சாலை எங்கும் பேனர்களையும் பிரமாண்ட கட்டுகளையும் வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் இடையூறாக இருந்தது.
எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம். pic.twitter.com/BUkBIZDlx3
— Wake Up SIC (@Arappor) November 4, 2018
இதனை சுட்டிக்காட்டும் விதமாக ட்விட்டரில் ஒருவர் இவ்வாறு பதிவிட்டிருந்தார், "எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம்."
தவறு.. மீண்டும் நடக்காது.. 🙏🏼 https://t.co/li3QDYAEvM
— Udhay (@Udhaystalin) November 4, 2018
இதற்கு பதில் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் "தவறு.. மீண்டும் நடக்காது.." என மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாமல் இனிமேல் இதைப் போன்ற நிகழ்வுகள், இடையூறுகள் நடக்காது என்றும் உறுதி அளித்துள்ளார். அவருடைய வார்த்தைகள் உண்மையாகுமா, இனிமேலாவது இந்த பேனர் கலாச்சாரம் குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.