கட்சி தலைமையின் உத்தரவை மீறிய ECR சரவணன்..! தவெகவில் அடுத்த விக்கெட் அவுட்டா ? பரபரப்பு போஸ்டர்....!!!



tvk-saravanan-poster-controversy

 

சோழிங்கநல்லூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. ஈ.சி.ஆர். சரவணனின் பேனர், போஸ்டர் நடவடிக்கைகள் தற்போது கட்சிக்குள் பேசுபொருளாகியுள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் விளம்பரங்கள் வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பனையூர் முதல் திருவான்மியூர் வரையிலான பகுதிகளில் தொடர்ந்து போஸ்டர்கள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.

பனையூர் அலுவலகம் வரை நீளும் போஸ்டர் சர்ச்சை

விஜய் ரசிகர் மன்ற காலத்திலிருந்தே தீவிரமாக செயல்பட்டு வரும் சரவணன், விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்துவதாக விமர்சனங்கள் உள்ளன. குறிப்பாக பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலிலும் அவரது போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவை அகற்றப்பட்ட பின்னரும் மீண்டும் ஒட்டப்படுவதாக கட்சியினர் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாங்களும் தவெக- வுக்கு எதிரி தான்! கூட்டணி குறித்து எடப்பாடி சொன்ன அந்த ஒரு வார்த்தை.... அப்போ ஒன்றுகூடி ஒரு அணியிலா? இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே...!!!

வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் தனக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், கட்சித் தலைவர் விஜய்யின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் சரவணன் முறையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சித் தலைமையின் உத்தரவு மீறப்பட்டதாக புகார்

மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கக்கூடாது என தவெக தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலையில், தொடர்ந்து விளம்பரங்கள் இடம்பெறுவது கட்சியினரிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களிலும் சில தவெக ஆதரவாளர்கள் சரவணனை நேரடியாக விமர்சித்து வருகின்றனர்.

மாற்று அரசியல் குறித்து கட்சி பேசிவரும் நிலையில், ரசிகர் மன்ற பாணியில் விளம்பர நடவடிக்கைகள் தொடர்வது பொருத்தமற்றது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக போஸ்டர் சர்ச்சை குறித்து எக்ஸ் தளத்தில் தவெக ஆதரவாளர்கள் பலரும் தங்களது அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.

தொகுதி அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு

சோழிங்கநல்லூர் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு, மின் விநியோக சிக்கல், குப்பை அகற்றுதல் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தாமல் விளம்பர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சரவணன் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

துக்க நிகழ்வுகளில் பங்கேற்பது உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் கூடிய ரீல்ஸ்களாக வெளியிடுவதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி செயல்படுவதுடன், கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் கடைபிடிக்க வேண்டும் என்பதே அவரை விமர்சிக்கும் தவெக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதொடர்பாக தவெக தலைமை அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் எம். எல்.ஏக்கள் மூலம் விஜய் வைக்கப்போகும் செக்! திமுக, அதிமுக நிலை என்ன? வெளியான ரகசிய தகவல்...!!!