ரூ.100 கோடி புகார் வழக்கு.. சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. அன்பில் மகேஷிடம் இன்று தீவிர விசாரணை!
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று அவர் போலீசார் முன்பு நேரில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் தொடர்ச்சியாக, அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய சென்னை மற்றும் திருச்சியில் உள்ள இடங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் செப்டம்பர் 16-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 177 தனியார் பள்ளிகள்.. பல கோடி வசூல்? சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. CCB போலீசார் அதிரடி நடவடிக்கை!
மேலும், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 8 பென்டிரைவ்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சோதனை முடிவில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் அன்பில் மகேஷின் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் தரப்பில் இந்த சோதனை அரசியல் நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 177 தனியார் பள்ளிகள்.. பல கோடி வசூல்? சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. CCB போலீசார் அதிரடி நடவடிக்கை!