4 மகன்கள் இருந்தும் இறுதிச்சடங்கில் அநாதையான தாய்.. சமூக அமைப்பினர் செய்த நெகிழ்ச்சி செயல்!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், 4 மகன்கள் இருந்தும் உயிரிழந்த தாயின் இறுதிச்சடங்கில் அவர்கள் யாரும் பங்கேற்காத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் சமூக அமைப்பினரே அந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் அருகே ரெசிடென்சி பகுதியில் வசித்து வந்த லதா பாய், தனது வாழ்நாள் சேமிப்பு மற்றும் நகைகளை விற்று குடியிருப்பு ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது மகன்களில் ஒருவர் அந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும், அதன்பிறகு லதா பாய் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் சமூக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆதரவின்றி தவித்து வந்த லதா பாய் குறித்து பிரியு ஃபவுண்டேஷனைச் சேர்ந்த அஜய் நாக்தாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, ஜானகி முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். அங்கு சுமார் 8 மாதங்களாக சமூக அமைப்பினரின் உதவியுடன் அவர் பராமரிக்கப்பட்டு வந்தார்.
இதையும் படிங்க: 9 பேரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்? மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு!

இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட லதா பாய் இந்தூர் எம்.ஒய். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து 4 மகன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் யாரும் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை என்றும், தாய்க்கு இறுதி சடங்குகளை செய்யவும் முன்வரவில்லை என்றும் சமூக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பிரியு ஃபவுண்டேஷன் மற்றும் ஜானகி முதியோர் இல்லத்தினர் இணைந்து லதா பாயின் இறுதிச்சடங்கை மேற்கொண்டனர். பிராந்திய பூங்கா பகுதியில் அவரது உடல் உரிய சடங்குகளுடன் தகனம் செய்யப்பட்டது. 4 மகன்கள் இருந்தும் தாயின் இறுதி சடங்கில் யாரும் பங்கேற்காத போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறுதி நேரத்தில் அவரை தனியாக விட்டுவிடாமல் சமூக அமைப்பினர் செய்த உதவி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: குப்பை மேடாக கிடந்த நதி... தனி ஒருவனாக சுத்தம் செய்த 20 வயது இளைஞர்!