18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு; பரபரப்பான சூழலில் தமிழக அரசியல்.

தமிழகத்தின் 18 தொகுதிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அரசியல் நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் 18 எம்எல்ஏக்களின் மனு அளித்தனர். இந்த நிலையில் சபாநாயகர் தனபால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் இவர்களை தகுதி நீக்கம் செய்தார்.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய நீதி அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணா நீதி அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வழக்கை இந்த நீதி அமர்வு விசாரித்து வந்ததது. இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளி வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.