குடும்ப எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… இறுதியில் கெஸ்ட் ஹவுஸில் சோக முடிவு!



Young couples suicide in uttarpradesh

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி கெஸ்ட் ஹவுஸ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 22 வயதான அமித் குமார் என்ற இளைஞரும் மற்றும் 19 வயதான நர்கிஸ் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் லக்னோவில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நர்கிஸ் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், இருவரும் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த கெஸ்ட் ஹவுஸ் ஊழியர், ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்துள்ளார். அப்போது இருவரும் மின்விசிறியில் ஒரே துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையும் படிங்க: கணவருடன் மற்றொரு பெண்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்! 

uttarapradesh

இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையின் கதவைத் திறந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறையில் நடத்தப்பட்ட சோதனையில், இருவரும் ஆர்ய சமாஜ் கோயிலில் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் கடிதம் ஒன்றும் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில், இருவரும் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்ததாகவும், தங்களது மரணத்திற்குப் பிறகு குடும்பத்தினரை யாரும் துன்புறுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலை பார்த்த சிறுமி… அடுத்த நொடியே நடந்த விபரீதம்! தாய், காதலன் கைது!