கொலை வழக்கில் இருந்து காதலனை காப்பாற்ற கற்பழிப்பு நாடகமாடி போலீசாரிடம் சிக்கிய இளம்பெண்!
கொலை வழக்கில் இருந்து காதலனை காப்பாற்ற கற்பழிப்பு நாடகமாடி போலீசாரிடம் சிக்கிய இளம்பெண்!
ஆக்ராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை 3 இளைஞர்கள் தன்னை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆரம்பத்தில் அந்த பெண் அளித்த புகாரில், தான் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அந்த மூவரும் ஒரு காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தள்ளி விட்டதாக கூறியிருந்தார்.
பின்னர் அந்த மூவரையும் கைது செய்த போலீசார் புகாரளித்த பெண்ணிடம் நடந்த சம்பவத்தை பற்றி பலமுறை விசாரித்துள்ளனர். ஆனால் அந்த பெண் ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பேசவே போலீசார் உஷாராயினர்.
மேலும் அந்த பெண்ணை துருவி துருவி விசாரித்ததில் தன் காதலனை ஒரு கொலை வழக்கில் இருந்து காப்பாற்றவே இப்படி செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட அந்த 3 இளைஞர்களும் அந்த பெண்ணின் காதலனின் கொலை வழக்கில் சாட்சிகளாக உள்ளனர்.
அந்த மூவரையும் சிக்க வைத்து விட்டு தனது காதலனை காப்பாற்றவே அந்த பெண் இப்படி நாடகமாடியது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை அந்த பெண் மற்றும் அவரது காதலனை கைது செய்தனர்.