படேல் சிலைக்கு சொந்த மாநிலத்திலே வலுக்கும் எதிர்ப்பு; குஜராத்தில் 75,000 பழங்குடியினர் துக்கம் அனுசரிக்க முடிவு!

படேல் சிலைக்கு சொந்த மாநிலத்திலே வலுக்கும் எதிர்ப்பு; குஜராத்தில் 75,000 பழங்குடியினர் துக்கம் அனுசரிக்க முடிவு!



people-against-sardar-patel-statue

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர் மோடி அறிவித்த முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை நிறுவுவது. அதன்படி அப்போதே அதற்கான வேலைகள் துவங்கப்பட்டன. 

அதன் பணிகள் முடிவடைந்த நிலையில் படேலின் பிறந்த நாளான வருகிற அக்டோபர் 31ஆம் தேதி பட்டேலின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். உலகின் மிகவும் உயரமான இந்த சிலை ஒற்றுமையை உணர்த்தும் சிலை என பெயரிடப்பட்டுள்ளது. 

people against sardar patel statue

இந்த சிலையின் சிறப்பு அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்;
https://www.tamilspark.com/india/statue-of-unity-specifications

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள கேவாதியா காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது சர்தார் வல்லபபாய் படேலின் சிலை. அந்த பகுதியை சுற்றியுள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் 75,000 பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரம் இந்த சிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சிலை திறக்கப்படும் அக்டோபர் 31ஆம் தேதி அந்த 70 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் துக்கம் அனுசரிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். அதாவது அந்த கிராமங்களில் யாராவது இறந்தால் எல்லோருடைய வீட்டிலும் உணவு சமைக்கமாட்டார்கள். அதேபோல் அக்டோபர் 31ம் தேதியும் அவர்கள் வீட்டில் யாரும் சமைக்காமல் துக்கம் அனுசரித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

people against sardar patel statue

இதைப் பற்றி பேசியுள்ள அந்த பழங்குடி மக்களின் தலைவர் "நாங்கள் குஜராத்தின் புதல்வரான சர்தார் படேலுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்கள் உரிமைகளை பறிக்கும் இந்த மத்திய மாநில அரசுகளை தான் எதிர்க்கிறோம். அவர்கள் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார்கள்.

சர்தார் சரோவார் நர்மதா திட்டத்திற்காகவும் இந்த சிலையை சுற்றி சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்காகவும் எங்களுடைய விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி விட்டது. இந்த ஒத்துழையாமை இயக்கம் ஆனது இங்குள்ள 100க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த நாளன்று இங்கு உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும் இந்த 70 கிராமங்களிலும் யார் வீட்டிலும் உணவு சமைக்கபடாமல் துக்கம் அனுசரிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

people against sardar patel statue

மேலும் அந்த மக்களுக்கு அரசு அளித்த வாக்குறுதிகள் ஆன வேலைவாய்ப்பு, மாற்று நிலம் ஆகியவை அரசால் சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அரசிடமிருந்து எங்களுக்கான பணம் மட்டும் தான் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். அதிலும் சிலர் அரசு அளித்த பணத்தையும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு விவசாயி கூறுகையில் "என்னுடைய ஒரு ஹெக்டேர் விவசாய நிலத்தை இந்தத் திட்டத்திற்காக அரசு எடுத்துக்கொண்டது. அதற்கு ஈடாக ஒன்றுக்கும் உதவாத ஒரு நிலத்தை எனக்கு அளித்திருக்கிறது. எதுவும் விளைவிக்க முடியாத அந்த இடத்தை மட்டும் வைத்து நான் என்ன செய்ய முடியும்" என பாதிக்கப்பட்ட அந்த பழங்குடியின விவசாயி புலம்புகிறார்.