காங்கிரஸ் தலைவர் பதவிக்கு; ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டால்...!! புதிய முதல்வர் யார்...?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு; ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டால்...!! புதிய முதல்வர் யார்...?



for-congress-president-if-rajasthan-chief-minister-gehl

ராஜஸ்தானில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் முதலமைச்சர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி கடந்த 2019-ஆம் வருடம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவேதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்பமுள்ளவர்கள் தங்கள் வேட்புமனுக்களை வரும் 30-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறும். 

தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். அதேவேளை, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி போட்டிடப்போவதில்லை என கூறியுள்ளார்.  ஆனால், ராஜஸ்தான் முதலமைச்சர் அசொக் கெலாட், கேரள எம்.பி. சசீ தரூர் போன்றோர் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

குறிப்பாக, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சி விதிகளின் படி ஒருவர் ஒரு பதவியில் தான் இருக்க முடியும் என்பதால் தலைவர் தேர்தலில் கெலாட் வெற்றிபெறால் அவர் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 

இந்நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் இன்று முதலமைச்சர் அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இருக்கும் அசோக் கெலாட் ஒருவேளை வெற்றிபெற்றால் ராஜஸ்தானுக்கு புதிய முதலமைச்சராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட் வெற்றிபெற்றால் ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அசோக் கெலாட் இல்லத்தில் இன்று நடைபெற இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அஜய் மாகன், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.