சமூக வலைதளங்களில் ஆதார் எண்; விளைவுகள் பற்றி எச்சரிக்கும் ஆதார் ஆணையம் !
சமூக வலைதளங்களில் ஆதார் எண்; விளைவுகள் பற்றி எச்சரிக்கும் ஆதார் ஆணையம் !
இந்திய அரசால் அணைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க ஆதார் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் நமது புகைப்படம் மற்றும் முகவரியும் அட்டையில் பதிவு செய்யபட்டிருக்கும். தற்போது கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு, பான் எண், மகளிர் குழு, சிம் கார்டு வாங்குவது, அரசு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் எண் முக்கியமாக தேவைப்படுகிறது.
இந்நிலையில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என, அதனை வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ கூறியுள்ளது.
ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, சமீபத்தில், தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, இந்த விவரத்தை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள் என பகிரங்கமாக சவால் விடுத்தார்.
இந்த சவாலுக்கு பதிலடியாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்ற பாதுகாப்பு நிபுணர், ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை ட்விட்டரில் வெளியிட்டார்.
இது தொடர்பாக ஆதார் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்: ஆதார் எண்ணை இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால் விடுப்பதை தவிர்க்க வேண்டும். இது போன்ற செயல்களை ஏற்று கொள்ள முடியாது. இதனை தவிர்ப்பது நல்லது. இத்தகைய செயல்களை செய்ய சட்டத்தில் இடமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.