கொரோனாவுக்காக பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த 'கொரோனில்' மருந்துக்கு மத்திய அரசு தடை!
கொரோனாவுக்காக பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த 'கொரோனில்' மருந்துக்கு மத்திய அரசு தடை!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனாலும் இதுவரை கொரோனாவிற்கு தடுப்பு மருந்து எந்த நாட்டிலும் கண்டுபிடிக்க இயலவில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளிலும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடந்துவரும் சூழலில், இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதம் ஆகியவற்றின் மூலம் இதற்கான மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து ஒன்றை கண்டறிந்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்திய மருந்தை விளம்பரம் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.
மேலும், கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறப்படும் மருந்தின் பெயர் மற்றும் அதன் மூலப் பொருள்கள், இதற்கான ஆராய்ச்சி நடைபெற்ற மருத்துவமனை அல்லது வேறு இடம் குறித்த விபரங்கள், செய்முறை, சோதனைக்கு எடுத்துக் கொள்ளபட்டோரின் விபரங்கள், பரிசோதனை தர நிர்ணயக் குழுவின் அனுமதி மற்றும் தொடர்புடைய இதர அமைப்புகளின் அனுமதி குறித்த விபரங்கள், சோதனை முடிவுகளின் முழுமையான அறிக்கைகள் ஆகியவற்றை கேட்டுள்ளனர்.
எனவே இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்து தெரிவிக்கும் வரை, கொரோனாவிற்கு தனது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக விளம்பரம் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.