சர்க்கார்: விஜய் ரசிகர்கள் மீது பாயும் வழக்குகள்; திகைத்து நிற்கும் ரசிகர்கள்.!
சர்க்கார் படத்திற்கு விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட் பேனர்கள் அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பபட்டு அவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான போதே படம் முழுவதும் அரசியல்தான் என்பது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு படம் வெளியானது. படம் முழுவதும் அரசியல் கலந்த மாஸாக இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.
இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சர்க்காருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை அண்ணாநகரில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில், சர்கார் படம் வெளியாகியுள்ள தியேட்டருக்கு எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதன் காரணமாக 3 திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற காட்சிகளால் கோபமடைந்த அதிமுகவினர், பேனர்களுக்கு அனுமதி பெறப்பட்டதா என்று விசாரித்தனர். இதுதொடர்பாக போலீசாரிடம் ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருவாரூரில் சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தஞ்சையில் 25 விஜய் ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக 20 விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. கரூரில் விஜய் ரசிகர்கள் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.