20 பேர்களை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த முடியாது.! தலைமைச்செயலகத்திற்கு சென்ற நடிகை குஷ்பு!
20 பேர்களை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த முடியாது.! தலைமைச்செயலகத்திற்கு சென்ற நடிகை குஷ்பு!
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க நாடுமுழுவதும் மார்ச் மாதத்திலிருந்து நாடும் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக சினிமா, சின்னத்திரை தொடர்பான படப்பிடிப்புகளை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் திரைத்துறையை சார்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சின்னத்திரை தொடர்பான படப்பிடிப்புகளை 20 நபர்களை மட்டும் வைத்து நடத்தாலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் தெரிவித்தார்.
ஆனால் இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் 20 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு படப்பிடிப்புகளை நடத்துவது என்பது சாத்தியமில்லாத காரியம் எனத் தெரிவித்தனர். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை, சின்னத்திரை சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர் குஷ்பு மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார்கள்.
அப்போது, நடிகை குஷ்பு கூறுகையில், சின்னத்திரை தொடர்களை 20 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு நடத்துவது என்பது சாத்தியமில்லாதா காரியம். காரணம் தொடரின் இயக்குநர், ஒளிப்பதிவாளர் அவர்களின் உதவியாளர்கள் மட்டுமே 30 நபர்களுக்கு மேல் வந்து விடுவர். இதனைத் தவிர்த்து நடிகர் நடிகையர்கள் வேறு உள்ளனர்.
எனவே சின்னத்திரை படப்பிடிப்பின்போது அதிகபட்சமாக நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட 20 பேருக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம் என்று தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியினை தளர்த்தி அதிகபட்சமாக 50 பேர் எண்ணிக்கையிலானவர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.