25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்!! பாடகர் கோமகன் மறைவுக்கு நடிகர் சேரன் இரங்கல்!!

25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்!! பாடகர் கோமகன் மறைவுக்கு நடிகர் சேரன் இரங்கல்!!



komagan-singer-death

பிரபல பாடகரும், மேடை இசைக்கலைஞருமான கோமகன் மறைவுக்கு நடிகர் சேரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனரும் நடிகருமான சேரன் இயக்கி அவரே நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றார் பாடகர் கோமகன். பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது. 

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருந்தது. இவர் சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எப் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் கோமகன் மரணம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சேரன், "வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது..
கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்." என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.