அன்று பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் செய்தியாளர்.. தற்போது சாலையோரத்தில் சமோசா விற்கிறார்.!



Afghan anchor forced to sell food on street after Taliban takeover

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்த நாடு மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர். தலிபான்களின் கெடுபிடி ஒருபுறம் வாட்டிவதைக்கும் நிலையில் வறுமை மறுபுறம் என மக்கள் சொல்ல இயலாத துயரங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும் நிருபராகவும் பணிபுரிந்த மூசா முகமது என்பவர் தற்போது சாலையில் சமோசா விற்று வருகிறார். ஆப்கனின் முன்னாள் அரசுப் பணியாளரான கபீர் ஹக்மால் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், தலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை. மூஸா முகமது பல ஆண்டுகளாக பல்வேறு ஆப்கன் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனால் இப்போது அவருக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறார். ஆப்கனில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.