புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய்விருந்து நடத்தி ரூ.4 கோடி வசூல் செய்த விவசாயி! நள்ளிரவில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய்விருந்து நடத்தி ரூ.4 கோடி வசூல் செய்த விவசாயி! நள்ளிரவில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!



unknown people try to theft money

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்காடு, கீரமங்கலம், வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் அதிவிமர்சியாக மொய்விருந்து நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் வடகாடு கிராமத்தை சேர்ந்த விவசாயியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த 25-ஆம் தேதி ஒரு டன் ஆட்டுக்கறியுடன் விருந்து கொடுத்து ரூ.4 கோடி வரை மொய் வசூல் செய்தார். மொய் எழுதிய இடங்களிலும், வங்கி சேவை மையத்தின் அருகிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு மைய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இந்தநிலையில் நேற்றிரவு கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனைப்பார்த்த கிருஷ்ணமூர்த்தி அலறல் சத்தம் போட்டுள்ளார்.

moi virunthu

கிருஷ்ணமூர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து மர்மநபர்கள் 4 பேரையும் பிடிக்க முயன்றார். அப்போது ஒருவர் மட்டும் அருகில் உள்ள தோட்டத்தில் சிக்கினார். மற்ற 3 பேரும் தப்பியோடி விட்டனர். இதனையடுத்து பிடிபட்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் அணவயல் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சிவநேசன் என்றும், வெளிநாடு செல்ல ஏஜெண்டிடம் பணம் கட்டி ஏமாந்தால் அந்த கடனை அடைக்க மொய் விருந்து பணத்தை திருட முயன்றதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் சிவநேசனை கைது செய்தனர். மேலும் சிவநேசனுடன்  வந்த அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.