கிணற்றை காணவில்லை!,.. வடிவேலு பட பாணியில் சமூக ஆர்வலர் கொடுத்த புகார்: சுவாரசிய பின்னணி..!

கிணற்றை காணவில்லை!,.. வடிவேலு பட பாணியில் சமூக ஆர்வலர் கொடுத்த புகார்: சுவாரசிய பின்னணி..!


the-well-was-missing-a-complaint-given-by-a-social-acti

வடிவேலு படத்தில் வரும் காட்சியை போல கிணற்றை காணவில்லை என புகார் அளித்த சம்பவம் மதுரவாயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மதுரவாயல் 11 வது மண்டலம் , 144 வது வார்டில் உள்ள பாரதியார் தெருவில் இயங்கி வரும்  அரசு பள்ளி வளாகத்தின் பின்புறம்  இருந்த 70 ஆண்டுகள் பழமையான கிணற்றை காணவில்லை என்று தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தேவேந்திரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், பாரதியார் தெரு பகுதியில் சர்வே எண் 113/A. 141/1A, 114/ 2b ல் இருந்த பழமை வாய்ந்த கிணற்றை தற்போது காணவில்லை. அந்த கிணற்றை  70 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், அதனை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பழமையான அந்த கிணறு பாழடைந்து இருந்த சூழலில், தற்போது கடந்த 1 ஆம் தேதி அந்த வழியாக  சென்றபோது முன்பு இருந்த அந்த பாழடைந்த கிணற்றை காணவில்லை. இது குறித்து அந்த பகுதி மக்களை விசாரித்த போது, அனைவருமே கிணறு தற்போது இல்லை என்று கூறினர்.

எனவே காணாமல் போன பழமைவாய்ந்த கிணற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என சமூக அக்கறையுடன் கேட்டுக்கொள்வதாக தேவேந்திரன் புகார் அளித்துள்ளார். மேலும் கிணறு இருந்த அந்த இடத்தில் தனிநபர் ரப்பீஸ் போன்ற மணல்களை கொட்டி நிரப்பி கிணறு இருந்த சுவடே தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கிணறு காணவில்லை என்று புகார் அளித்தது குறித்து சமூக ஆர்வலர் தேவேந்திரன் கூறுகையில், பழமை வாய்ந்த கிணறு காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆதி திராவிட சமூக மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் அவர்களின் தண்ணீர் தேவைக்காக பயன்படுத்திய கிணற்றை தற்போது தனி நபர் ரப்பீஸ் கொட்டி மூடி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், கிணற்றை மீட்க அவர் மீது நடவடிக்கை தேவை.  இது ஒரு காலத்தில் ஆதி திராவிட  சமூக மாணவ, மாணவிகள் பயன்படுத்திய கிணறு அது என்றும் கூறியுள்ளார்.

காணமல் போன கிணற்றை கண்டு பிடித்து தருமாறு நகைச்சுவை நடிகர் வடிவேல் பட பாணியில் புகார் அளித்த சம்பவம் மதுரவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.