லாரிக்கு அடியில் சிக்கிய சிறுவர்கள்!.. உடல் நசுங்கிய சிறுவன் பரிதாப பலி, ஒருவர் படுகாயம்!..நெடுஞ்சாலையில் பரபரப்பு..!

லாரிக்கு அடியில் சிக்கிய சிறுவர்கள்!.. உடல் நசுங்கிய சிறுவன் பரிதாப பலி, ஒருவர் படுகாயம்!..நெடுஞ்சாலையில் பரபரப்பு..!



The boy was crushed under the wheel of the lorry and tragically died on the spot

காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை அருகேயுள்ள தண்டலம், கீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன். இவருடைய மகன் சஞ்சய் (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், தன்னுடைய பள்ளித் தோழரான நேதாஜி (17) என்பவருடன் நேற்று மாலை பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூர் பகுதியிலுள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

இவர்கள் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் காலாடிபேட்டை பகுதியை கடந்து கொண்டிருந்த போது முன்னால் வந்த லாரியின் மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதியது. இந்த எதிர்பாராத விபத்தில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சாலையில் விழுந்த சஞ்சய் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.

லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் நேதாஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரியின் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.