தகப்பன் சொத்தில் மகளுக்கு பங்கில்லை.. முன்னோர்களின் வாக்கில் இப்படியொரு பாசப்பிணைப்பா?.. ஆச்சர்யமூட்டும் தகவல்.!

தகப்பன் சொத்தில் மகளுக்கு பங்கில்லை.. முன்னோர்களின் வாக்கில் இப்படியொரு பாசப்பிணைப்பா?.. ஆச்சர்யமூட்டும் தகவல்.!


Tamil Relationship Culture Brother Sister Born To Die

தந்தையின் சொத்தில் பெண்களுக்கு பங்கு கொடுக்க தேவையில்லை என்ற நடைமுறை தமிழகத்தில் இன்றளவும் இருந்து வருகிறது. சில தந்தைகள் தனது சொத்துக்களை ஆண், பெண் பிள்ளைகளுக்கும் சமமாக பிரித்து வழங்கி இருந்தார்கள். பரவலாக நிலவும் கூற்று குறித்து, முகநூலில் கிரிஷ் என்பவர் பதிவு செய்துள்ளார். 

அந்த பதிவில், "தந்தையின் சொத்தில் பெண்களுக்கு பங்கு தேவையில்லை என்று கூறிய முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. ஒரு வீட்டில் பிறந்த அண்ணன் - தம்பிகள் தந்தையின் சொத்தில் பங்கு பிரித்துக்கொண்டு பங்காளியாக மாறிவிடுகிறார்கள். இருவரும் வீட்டு விசேஷ நாட்களுக்கு சென்றுவருவதோடு சரி. கொடுக்கல் வாங்கல் போன்றவற்றை கணக்கில் வைத்து, வட்டியுடன் வசூலித்துக்கொள்கிறார்கள். 

ஆனால், பெண்களுக்கு பாகம் கொடுப்பது இல்லை. மாற்றாக கல்யாண சீர், நகை, பாத்திரம், பண்டம், வாகனம் என ரொக்கத்துடன் பட்டியல் நீண்டுகொண்டு செல்லும். பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்துமதிப்பை விட, சீரினால் கிடைக்கும் பொருட்களின் மதிப்பு அதிகம். இதோடு முடியாமல் சீமந்தம், பிள்ளைப்பேறு, பெயர் சூட்டுதல் என தொடங்கி, பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி திருமணம் செய்யும் வரை தாய்மாமன் சீர் தொடரும். உடன்பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவனே வருவான். இவை அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால், பாகம் பிரித்து போகும் போது கிடைக்கும் சொத்து மதிப்பின் அளவை விட பன்மடங்கு அதிகமாக தான் இருக்கும். இதனை ஆண் கணக்கிட்டு செய்தது இல்லை. செய்ய இயலாது என்றும் கூறுவது இல்லை. தங்கை, அக்காவின் நலனுக்காக அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறான். 

தந்தையின் சொத்தில் தங்கை, அக்காவுக்கு பாகம் கொடுத்துவிட்டால், அதோடு அனைத்தும் முடிந்துவிடும், அவள் ஆதரவற்று போகிறாள். கொடுக்கல், வாங்கல் இருக்காது. அவ்வாறே செய்தாலும் அது கணக்குதான். வேறொரு வீட்டில் வாழச்செல்லும் பெண்ணின் கடைசி பாதுகாப்பும், ஆதரவும் அவளது பிறந்தவீட்டில் உள்ள சகோதரன் தான். அந்த உறவை ஏற்படுத்திக்கொடுக்கவே முன்னோர்கள் பெண்களுக்கு சீர் செய்யும் முறையை வைத்திருந்தனர். 

tamil

பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு என அரசு கொண்டு வந்த சட்டம் பெரும்பாலும் உறவை முறித்துதான் உள்ளது. எங்கோ ஒருவன் செய்யாமல் ஏமாற்றிவிட்டான் என்பதற்காக, செய்தவனும் சொத்தில் பங்கை கொடுத்து, மேற்படி எதற்கு செய்ய வேண்டும் என்று யோசனை செய்ய தொடங்குகிறான். உறவுகள் தான் உலகில் உடன் வருபவை. உரிமை, புரட்சி என பேசுபவர்கள் யாரும் உடன் வரமாட்டார்கள். தன் உடன்பிறந்தாளுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால், உங்களுடன் பிறந்தவனின் மனது தான் துடிக்கும். அவனும் சக உதிரன் தானே" என்று தெரிவித்துள்ளார். 

இந்த கருத்துக்களை படித்த ஒருவர், "ஐயோ! தெய்வங்களே உண்மையான பாசம் இருக்கும் ஆணோ, பெண்ணோ கண்டிப்பா உடன்பிறந்தவர்களை பாரமாக நினைப்பதிலை. செய்யணும் என்று நினைக்கும் இடத்தில் பணம் இருக்காது. பணம் இருக்கும் இடத்தில் மனம் இருக்காது இதுதான் உண்மை. ஒரு தங்கை இருந்தால் சமாளிக்க முடியும். ஒரு அண்ணா தம்பிக்கு மூன்று அக்கா தங்கை இருந்தால் ரொம்ப கஷ்டம். ஒரு ஜீவன் எவளோ செய்ய முடியும். தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்" என்று கூறவே, கிரிஷ் எனக்கும் 3 அக்கா உள்ளார்கள். அதனால் தான் இதனை பதிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.