விடுதலைக்கு தயாராகும் சசிகலா!அபராதத் தொகையை செலுத்த மனுத்தாக்கல்!



Sasikala ready to release

 

சொத்து குவிப்பு சிறையில் உள்ள சசிகலா தனது அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர் லதா கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.


அதில், சிறை ஆவணங்கள்படி உச்சநீதிமன்றம் விதித்துள்ள அபராதத்தொகையை செலுத்தினால், சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆகலாம். அபராதத்தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் 13 மாதங்கள் அதாவது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில், சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலை ஆவார் என்று கூறி உள்ளார். அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தியுள்ள நிலையில், சசிகலாவும் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.