சளி, இருமலுடன் அவதிப்பட்ட முதியவரை வீட்டை விட்டு துரத்திய உறவினர்கள்..! சாலை ஓரத்தில் கிடந்தவரை மருத்துவமனையில் சேர்த்த அதிகாரிகள்.! பதறவைக்கும் சம்பவம்.!

கொரோனா அறிகுறியுடன் இருந்த 60 வயது முதியவரை அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு துரத்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமல், மூச்சு திணறலால் அந்த முதியவர் அவதிப்படுவந்துள்ளார். இவை அனைத்தும் கொரோனா அறிகுறி என்பதால் வீட்டில் இருந்தவர்கள் அவரை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய அந்த முதியவர் எங்கு செல்வது என்று தெரியாமல் அந்த பகுதியில் இருந்த சாலை ஓரத்தில் படுத்து தூங்கியுள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி, பின்னர் அந்த முதியவரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அந்த முதியவர் படுத்திருந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. கொரோனா அறிகுறி இருந்ததால் முதியவர் குடும்பத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.