வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டுமா?!,.. ஆசை காட்டி வலை விரிக்கும் இணையதளம்: 1.25 லட்சத்தை பறிகொடுத்த இளம்பெண்..!



make-money-from-home-through-internet

திருவண்ணாமலை மாவட்டத்தில், வீட்டில் இருந்த படியே இணையதளம் மூலம் சம்பாதிக்கலாம் என்று இணையதள முகவரி மூலம் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி  மூலம் பணத்தை கட்டி ஏமாந்து இருக்கிறார் பெண் ஒருவர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாயை சேர்ந்த பெண் ஒருவர் செல்போன் எண்ணிற்கு வீட்டில் இருந்த படியே இணையதளம் மூலம் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை ஏற்படுத்தும் வகையில் ஒரு இணையதள முகவரியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. 

அந்த முகவரியில் உள்ள இணைப்பை அவர் உள்ளே சென்று பார்த்த போது, அதில் குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால் கொடுக்கும் பணியை செய்து முடித்தபின் அந்த பணம் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்து.

எனவே அந்த பெண்ணும் ஆர்வமாக பணம் செலுத்தி பணிகள் மேற்கொள்ள கூடுதலாக பணமும் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என பணம் செலுத்தி குறிப்பிட்ட பணிகளை செய்து உள்ளார். 

தொடர்ந்து அவர் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பணிகள் முடித்தபின் எந்த வித பணமும் திரும்ப வரவில்லை. மேலும் அவரால் யாரையும் தொடர்பும் கொள்ள முடியவில்லை என்று தெரிகின்றது. 

அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இது குறித்து அந்த பெண் திருவண்ணாமலை சைபர் கிரைம் காவலரிடம் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.