மதுரையில் வேகமாக பரவும் கொரோனா! சென்னையை போலவே கடுமையாக்கப்படும் ஊரடங்கு!
மதுரையில் வேகமாக பரவும் கொரோனா! சென்னையை போலவே கடுமையாக்கப்படும் ஊரடங்கு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலே சென்னையில் தான் ஆரம்பத்திலிருந்து கொரோனா பரவலின் எண்ணிக்கை அதி தீவிரமாக பரவி வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 ஆம் தேதி முதல் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது.
இதனையடுத்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வந்தது. மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் நேற்று வரை 705 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இயங்கலாம். ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லைஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.