சென்னையை சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா அறிகுறி! அவர்களுக்கு வைரஸ் பரவியது எப்படி?

சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த கொடூர வைரஸை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைவாக இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்களால் சற்று அதிகரிக்க தொடங்கியது. அந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சென்னை எண்ணூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் அண்ணன்-தம்பி ஆகிய இருவர் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக அடையாளம் காணப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறை மற்றும் கொரோனா தடுப்பு அதிகாரிகள் அவர்களின் வீட்டுக்கு சென்று பரிசோதனை செய்தனர்.
அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் அண்ணன்-தம்பி இருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியானது. இதனையடுத்து உடனடியாக 2 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அவர்களது குடும்பத்தினரும் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, அந்த பகுதிக்கு வெளிநபர்கள் செல்லாமல் இருக்க அந்த பகுதிக்கு செல்லும் 5 வழிகளையும் அடைத்து சீல் வைத்தனர்.