இதை மட்டும் செஞ்சிடாதீங்க.. காவுவாங்கிய ரம்மி... காவலரின் மனைவி கண்ணீர் குமுறல்.!

இதை மட்டும் செஞ்சிடாதீங்க.. காவுவாங்கிய ரம்மி... காவலரின் மனைவி கண்ணீர் குமுறல்.!



Coimbatore Suicide Police Officer Wife Pressmeet about Rummy

ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரின் மனைவி கண்ணீர் மல்க பலருக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

கோயம்புத்தூர் ஆயுதப்படை காவலர் காளிமுத்து. இவரின் மனைவி தில்லைநாயகி. கடந்த ஜூலை 16-ல் பணியில் இருந்த காளிமுத்து, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், அவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. இந்த நிலையில், காவலரின் மனைவி கண்ணீர் மல்க பலருக்கும் கோரிக்கை வைத்துள்ளார். 

அந்த பேட்டியில், "எனது கணவர் கோவை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிறிய சிறிய கடனால் கணவர் விரக்தியில் இருந்தார். இந்த சூழலில் ஆன்லைன் ரம்மி காரணமாக பணத்தை இழந்தவர் விரக்தியின் உச்சத்திற்கு சென்றார். 

Coimbatore

இதனால் அவர் தனது பிள்ளைகளை பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்ற விரக்திக்கும் சென்றார். இறுதியில் அவரின் உயிரையும் மாய்த்துக்கொண்டார். நான் எனது பிள்ளைகளின் நிலையை எண்ணி உயிருடன் இருக்கிறேன். அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டும். தயவு செய்து யாரும் ஆன்லைன் ரம்மி உட்பட பிற கேம்களை விளையாட வேண்டாம்" என்று தெரிவித்தார்.

இவர்கள் உட்பட ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ஆறுதல் அளிக்கப்பட்டு, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பலரும் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். மேலும், எக்காரணம் கொண்டும் தற்கொலை எண்ணம் வேண்டாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சந்தித்துக்கொள்ளலாம். நீங்கள் தற்கொலை செய்துகொண்டால், உங்களின் குடும்ப நிலைமை என்னவாகும்? என்ற ஆதங்க கேள்வியையும் முன்வைத்தனர்.