குத்தகைக்கு வாங்கிய வீட்டை சொந்த வீடாக குத்தகைக்கு விட முயற்சி; 3 இலட்சம் மோசடி வழக்கில் .கேடி கைது.!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர், லிப்ரோ தெருவில் வசித்து வருபவர் அனிதா (வயது 61). இவர் தனது வீட்டை குத்தகைக்கு விட செல்போன் செயலில் பதிவு செய்துள்ளார். இதனை கண்ட ஆதம்பாக்கம் பகுதியை சார்ந்த லட்சுமி நாராயணன் (வயது 37), 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து வீட்டை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
அந்த வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு சிறிது காலம் தங்கி இருந்த நிலையில், அனிதாவின் வீட்டை தனது வீடாக பாவித்து, அதனை குத்தகைக்கு விடுவதாகவும் லட்சுமி நாராயணன் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இதனைப்பார்த்து தொடர்பு கொண்ட மோனிஷ் என்ற இளம் பெண்ணிடம் லட்சுமி நாராயணன் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை வாங்கிய நிலையில், சந்தியா என்ற பெண்மணிடமும் ரூபாய் 2 லட்சம் வாங்கியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த வீட்டின் உரிமையாளர் அனிதா, லட்சுமி நாராயணனை தட்டி கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனையடுத்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், லட்சுமி நாராயணனை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தனது வாகனத்தில் சர்வதேச மனித உரிமை ஆணைய குற்ற எதிர்ப்பு செயலாளர் என்ற வாசகத்தை ஒட்டி பொதுமக்களை ஏமாற்றி வந்ததும் அம்பலமானது.