போலீஸ் ஸ்டேஷனில் பெண் அடித்து துன்புறுத்தல்.. எஸ்.ஐ உள்ளிட்ட 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்..!

போலீஸ் ஸ்டேஷனில் பெண் அடித்து துன்புறுத்தல்.. எஸ்.ஐ உள்ளிட்ட 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்..!



beating-and-harassing-a-woman-at-the-police-station

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வைத்து பெண்ணை அடித்து துன்புறுத்திய சர்ச்சையில் எஸ்.ஐ மற்றும் 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் பெண்மீது வழக்குப்பதிவு செய்யாமலும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சுமதி பெண்ணை அடித்து துன்புறுத்திய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தனிப்பிரிவு காவலர் முருகன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் பிரபாகரன் (45), இவரது வீட்டில் கடந்த 4 ஆம் தேதி 10 சவரன் தங்க நகை காணாமல் போனது. இது குறித்து அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகம் மனைவி சுமதி (40) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 7 ஆம் தேதி பெண் காவலர்கள் மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகிய மூவரும் சுமதியை முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவர்கள் மூவரும் சுமதியை கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் காயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், பெண் காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக அவர் கடந்த 11ஆம் தேதி எஸ்.பி-யிடம் மனு அளித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். விசாரணையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 15 ஆம் தேதி பெண் காவலர்கள் மூவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரை  ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்தும் எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் தூத்துக்குடி எஸ்.பி-யின் பரிந்துரையின் பேரில், முத்தையாபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலையை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.