ராணுவ வீரரின் வெறிச்செயல்.. பிரசவம் முடிந்து வீட்டிற்கு வர மறுத்த மனைவி.. மது போதையில் ரகளை செய்து குழந்தையை தூக்கி சென்ற சம்பவம்..!

மதுரை அருகே சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர்கள் சூரிய பிரகாஷ் - கார்த்திகா ராஜு தம்பதியினர். சூரிய பிரகாஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து விடுமுறைக்காக ஊர் திரும்பி உள்ளார். தற்போது தனது மனைவிக்கு குழந்தை பிறந்து இருப்பதால் மனைவியும் குழந்தையும் தனது வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சூரிய பிரகாஷ் பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் சூரிய பிரகாஷின் மனைவி கார்த்திகா ராஜு அவருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதனையடுத்து கார்த்திகா ராஜுன் குடும்பத்தினர் சூரிய பிரகாஷ் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் மது போதையில் தனது நண்பர்களுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கோபமடைந்து சூரிய பிரகாஷ் கார்த்திகா ராஜுன் உறவினர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் தனது மாமியார் வீட்டை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல் தனது 3 மாத குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.