அறிமுக ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஹனுமா விஹாரி, கை கொடுத்த ஜடேஜா

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 3-1 என்ற கணக்கில் முன்பே தொடரை வென்றுவிட்ட நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு பட்லர் 89 ரன்களும், அலெய்ஸ்டர் குக் 71 ரன்களும் எடுத்து உதவியதால் முதல் இன்னிங்ஸில் 332 ரன்களில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
இதனையடுத்து இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக தவானும் ராகுலும் களம் புகுந்தநர். தவான் மூன்று ரன்னில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன் பின் களம் இறங்கிய கேப்டன் கோஹ்லி தனக்கே உரித்தான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இருப்பினும் 49 ரன்களில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து அவுட்டானார்.
நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியஅணி 51.0 ஓவர்களுக்கு 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
மூன்றாவது நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியாவின் ஹனுமந் விஹாரி மற்றும் ஜடேஜா தங்களது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களது விக்கெட்டினை எடுக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தியும் பலனளிக்கவில்லை. தனது முதலாவது ஆட்டத்தில் ஆடிய விஹாரி தனது முதல் அரை சதத்தை கடந்தார். அவர் 56 ரன்கள் எடுத்த நிலையில் மெயின் அலி பந்தில் அவுட்டானார்.
பின்னர் ஜடேஜாவும் தனது அரை சதத்தை கடந்தார். 7 ஆவது விக்கெட்டுக்கு விஹாரி மற்றும் ஜடேஜா 77 ரன்களை குவித்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக இந்திய அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா கடைசி வரை அவுட்டாகாமல் 86 ரன்கள் எடுத்திருந்தார்.