துலீப் ட்ராபி யாருக்கு? சென்னையில் இன்று பலப்பரீட்சை... ரசிகர்களுக்கு இலவச அனுமதி!



Duleep trophy final today

இந்தியாவின் முக்கியமான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை 2026-27 தொடரின் இறுதிப்போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், கிழக்கு மண்டலம் – தெற்கு மண்டலம் அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

5 நாட்கள் நடைபெறும் இறுதிப்போட்டி செப்டம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி தினமும் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முதலில் பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்த இறுதிப்போட்டி, ரசிகர்கள் நேரில் வந்து போட்டியை காணும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சென்னைக்கு மாற்றப்பட்டது.

இந்த இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டலமும், மறுபுறம் திலக் வர்மா தலைமையிலான தெற்கு மண்டலமும் மோதுகிறது. கிழக்கு மண்டலம் இறுதிப்போட்டிக்கு வருவதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் இஷான் கிஷன் மற்றும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோரின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது. குறிப்பாக அரையிறுதியில் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டமும், ஷமி–முகேஷ் குமார் ஆகியோரின் பந்துவீச்சும் அணிக்கு பலம் சேர்த்தன.

இதையும் படிங்க: CSK-வின் அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சனா? பரபரக்கும் பேச்சு!

Duleep trophy 2026

அதேபோல், தெற்கு மண்டலமும் சளைத்ததல்ல. கேப்டன் திலக் வர்மாவுடன் தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் அணியின் பலத்தை அதிகரித்துள்ளனர். ஒருபுறம் இளம் வீரர்களின் வேகமும், மறுபுறம் அனுபவ வீரர்களின் திறமையும் கொண்ட வீரர்கள் இருப்பதால், இந்த இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான கிரிக்கெட் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டுகளிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் 4-வது நுழைவாயில் வழியாக காலை 9 மணி முதல் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். C, D மற்றும் E கீழ்நிலை ஸ்டாண்டுகளில் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம்.

இதையும் படிங்க: மகளிர் ஆசியக் கோப்பை: இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை!