"யுவராஜ் ஹாட்ரிக் சிக்சர் அடித்ததும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா" - சாகல் ஓபன் டாக்!

"யுவராஜ் ஹாட்ரிக் சிக்சர் அடித்ததும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா" - சாகல் ஓபன் டாக்!



chahal-reaction-on-yuvrajs-hatrick-six

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஏழாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணியின் யுவராஜ் ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் நான்காவது வீரராக களமிறங்கிய யுவராஜ் சிங், 14 ஆவது ஓவரை வீசிய பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாகலின் ஓவரில் முதல் 3 பந்துகளிலுமே சிக்சர்களை பறக்கவிட்டார். 

மீண்டும் 6 பந்துகளில் 6 சிக்சர் அடிக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதேபோலவே அடுத்த நான்காவது பந்திலும் சிக்சர் அடிக்கவே முயன்றார் யுவராஜ். ஆனால் மிட்விக்கெட்டில் நின்ற சிராஜ், சிக்சருக்கு சென்ற பந்தினை சிறப்பாக கேட்ச் பிடித்து யுவராஜை அவுட்டாக்கினார். 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சாகல், "யுவராஜ் முதல் 3 பந்துகளிலுமே சிக்சர் அடித்ததும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் ப்ராடின் நிலைமை தான் நமக்கும் என எண்ணினேன். இருப்பினும் என்னுடைய சிறந்த பந்துவீச்சை அடுத்த பந்தில் வீச வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி, ஆஃப் சைடில் வீசிய கூக்ளி பந்தை சிக்சர் அடிக்க முயன்ற யுவராஜ் அவுட்டாகிவிட்டார்" என கூறியுள்ளார். 

Yuvaraj singh

நேற்றைய ஆட்டத்தின் போது, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் T20 உலககோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ப்ராட் பந்தில் ஒரே ஓவரில் யுவராஜ் அடித்த 6 சிக்சர் அனைவருக்குமே நினைவிற்கு வந்துவிட்டது. 

ஒருவேளை நேற்று யுவராஜ் ஆறு சிக்சர்கள் அடித்திருந்தால், சர்வதேச அளவில் தற்போது வளர்ந்து வரும் சாகலின் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கும். நல்லவேளை தப்பித்தார் சாகல். 

Yuvaraj singh

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் யுவராஜை யாருமே எடுக்க முன்வரவில்லை. கடைசியில் தான் மரியாதை நிமித்தமாக மும்பை அணி அவரை வாங்கியது. அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி ஆடத் துவங்கியுள்ள யுவராஜ் முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.