உரிய நேரத்தில் தொண்டர்கள் புடைசூழ அதிமுக அலுவலகம் செல்வேன்: சசிகலா சபதம்..!

உரிய நேரத்தில் தொண்டர்கள் புடைசூழ அதிமுக அலுவலகம் செல்வேன்: சசிகலா சபதம்..!



sasikala-said-that-she-will-go-to-the-admk-head-office

அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் தொண்டர்களுடன் செல்ல இருப்பதாக சசிகலா கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா தாமரைப்பாக்கத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் அ.தி.மு.க தொடர் தோல்வியை இது வரை சந்தித்ததில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் 34 பதவிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் தனிப்பட்ட சிலரின் சுயநலத்தால், நமது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலில் தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது வேதனையை அளிக்கிறது.

ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி எழுப்பிய சசிகலா மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளை கடைப்பிடிப்பவர்களே உண்மையான அ.தி.மு.க தலைவராக இருக்க முடியும்.

அ.தி.மு.க-வுக்கு கண்டிப்பாக ஒற்றை தலைமை வேண்டும். அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக அது இருக்க வேண்டும். பண பலமோ அல்லது படை பலமோ ஒரு தலைவரை தீர்மானிக்க முடியாது.

மக்கள் பலமும், தொண்டர் பலமும் தான் ஒரு தலைவரை தீர்மானிக்கும். ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையில் இயக்கம் மீண்டும் வலிமை பெறும். அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் தொண்டர்களுடன் செல்ல இருப்பதாகவும் சசிகலா பேசினார்.