#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
PUBG கேம் விளையாடுவதற்கு முற்றிலும் தடை! மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அதிரடி உத்தரவு
PUBG கேம் விளையாடுவதற்கு முற்றிலும் தடை! மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அதிரடி உத்தரவு
ஒரு பெரிய தீவு பகுதியில் பல அணிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லும் ஒரு ஆக்ரோஷமான விளையாட்டு தான் 'பப்ஜி'. இந்த போட்டியில் எந்த அணியினர் கடைசிவரை உயிரிழக்காமல் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.
இந்த 'பப்ஜி' கேமானது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த விளையாட்டிற்கு பல கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளும், ஏன் பெரும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் கூட அடிமையாகியுள்ளனர். இந்த விளையாட்டுக்கு அடிமையான டெல்லியை சேர்ந்த ஒரு இளைஞர் தன் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு அரங்கேறியது.
இந்நிலையில், VIT (Vellore Institute of Technology) கல்லூரி நிர்வாகம், தங்களது கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் இந்த விபரீதமான 'பப்ஜி' கேமை விளையாட தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை சமூக தளங்களில் பரவி வருகிறது.
அந்த சுற்றறிக்கையில் "நாங்கள் பலமுறை எச்சரித்தும் கல்லூரி மாணவர்கள் PUBG கேம் விளையாடுவதை நிறுத்தவில்லை. மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதிக்கவில்லை. இதைப் போன்ற விளையாட்டுகளை விடுதியில் தங்கியிருக்கும் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கல்லூரி வளாகத்தில் இந்த PUBG கேம் விளையாடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் இதைப்போன்ற வீடியோ கேம்கள் விளையாடுவது தவிர்த்துவிட்டு உடலளவில் விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து அந்த கல்லூரி விடுதியின் காப்பாளர் மோகனசுந்தரம் பேசுகையில், “இந்த சுற்றறிக்கை பொய்யானது அல்ல. உண்மை தான். ஏனெனில், மாணவர்கள் இதற்கு முற்றிலும் அடிமையாகிவிட்டார்கள். விடுதியில் மாணவர்கள் தொடர்ந்து இந்த கேமை விளையாடிக்கொண்டே இருப்பதால் மற்ற மாணவர்களுக்கு இதனால் பெரும் தொந்தரவு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து புகார்கள் வரத் தொடங்கியதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் பலர் இதனால் வகுப்புகளுக்கு சரிவர வராமல் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.