நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது.? பாரம்பரியம் பறிபோகிறது.! குமுறும் கிராம விவசாயிகள்.!
நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது.? பாரம்பரியம் பறிபோகிறது.! குமுறும் கிராம விவசாயிகள்.!
நாக்கு ருசி காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் நமது உணவுப் பழக்கவழக்கம் முறை முற்றிலும் மாறுபட்டுள்ளது. நமது முன்னோர்கள் உட்கொண்ட கேப்பைக் கூழ், கம்மங் கஞ்சி அவர்களை நீண்ட நாள் வாழ வைத்தது. மேலும் அவர்கள் உட்கொண்ட காய்கறிகள், பழ வகைகள் அனைத்தும் கலப்பின வகையை சேர்ந்தது அல்ல.
ஆனால் தற்போது, நமது முன்னோர்கள் உட்கொண்ட அனைத்துமே அடுத்த தலைமுறைக்கு கிடைக்காமல் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக முருங்கைக்காயை எடுத்துக் கொள்வோம். நாட்டு முருங்கக்காய் என்பது அந்த மரத்தில் வருடத்திற்கு ஒரு முறை குறைந்த அளவு 200 முதல் 300 வரை காய்களை விளைவிக்கும். ஆனால் தற்போது அந்த நாட்டு முருங்கை முற்றிலுமாக அழிந்து வருகிறது.
காரணம் தற்போது கலப்பின முருங்கை வந்ததிலிருந்து, நாட்டு முருங்கை காணாமல் போனது. கலப்பின முருங்கையில் , ஒரு மரத்தில் குறைந்தது 1000 முதல் 2000 வரை காய்கள் விளைகின்றன. இதன் காரணமாகவே விவசாயிகளும் கலப்பினம் முருங்கையை பயிரிடுகின்றனர். இது முருங்கை மட்டுமல்ல அனைத்து வகை பயிர்களுமே இவ்வாறுதான் நடவு செய்து வருகின்றனர் விவசாயிகள்.
ஏதோ ஒரு சில இடத்தில் தான் நாட்டு வகை பயிர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. நமது நாட்டு மாடுகளை காப்பாற்ற ஜல்லிக்கட்டிற்காக மாபெரும் போராட்டம் நடத்தியவர்கள் தமிழர்கள். ஆனால் நமது உயிர் காக்கும் இயற்கை உணவுப் பயிர்களை காக்க மறந்துவிட்டோம். எனவே நமது இயற்கை பாரம்பரிய உணவு விதைகளை நாம் அழிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.