ஏன் இந்த செடி மட்டும் தொட்டால் சுருங்குகிறது? காரணம் இதுதான்!!

எத்தனையோ, இலை, மரம், செடி, கொடிகள் இருந்தாலும், இந்த ஒரு செடிக்கு மட்டும் தனி சிறப்புண்டு. ஏனென்றால், இந்த செடி மனிதர்களோடு ஒப்பிடப்படுகிறது. அதுதான் தொட்டால் சுருங்கி அல்லது தொட்டால் சிணுங்கி என்று சொல்லப்படும் மிகவும் சிறப்புவாய்ந்த செடி ஆகும்.
தொட்டால் சுருங்கி செடியானது, தொட்டாலே வாடிவிடும். இந்த செடி மட்டும் ஏன் இவ்வாறு ஆகிறது என்று பார்க்கலாம்.
இத்தாவரத்தின் தாவரவியல் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும்.
இதற்கு தொட்டால் சுருங்கி, இலச்சகி, தொட்டால்வாடி, வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை, ஆள்வணங்கி போன்ற பல பெயர்கள் உண்டு.
இந்த தொட்டால் சுருங்கி இலையானது மற்ற தாவர இலைகளை போலவே பல செல்களின் சேர்க்கையால் ஆனவை.
இலைக்குள் ஒவ்வொரு செல்லும் சில வகையான திரவப் பொருட்களை கொண்டிருக்கும். இந்தத் திரவத்தில் ஏற்படும் ஒருவித அழுத்த மாறுபாட்டின் காரணமாகவே செல்களும், அவற்றாலான இலைகளும் நிமிர முடிகிறது.
இந்த இலையில் உள்ள உயிரணுவிலிருந்து திரவம் வெளியேறிவிட்டால், இலையின் தன்மை தளர்ந்து இலைகள் சுருங்கி விடும்.
இந்த தொட்டால் சுருங்கி செடியானது, யாரேனும் அதை தொட்டாலோ அல்லது அதன்மீது ஏதேனும் பட்டாலோ அதன் தண்டுப் பகுதியில் ஒரு வகை அமிலத்தைச் சுரக்கச் செய்யும்.
இதனால், இலையின் கீழ்ப்பகுதி செல்களில் உள்ள திரவத் தன்மை நீங்கிவிடுகிறது. ஆனால், இலையின் மேற்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள திரவத்தன்மை நீங்குவது இல்லை. எனவே, இலையின் எடை காரணமாக, இலைகள் தளர்ந்து சுருங்குகின்றன.
இதனாலேயே, நாம் தொட்டவுடன் இலைகள் சுருங்கி விடுகின்றன.