தூத்துக்குடியில் 30 வயது பெண்ணை அரிவாளோடு வந்து ஓட ஓட விரட்டி வெட்டிய முதியவர்! பதறவைக்கும் வீடியோ காட்சி.....

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே அமைந்துள்ள சுந்தர் நகர் 1-வது தெருவில் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்று, அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன் விரோத சம்பவம்
இங்கு நிஷாந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். கந்தசாமி வீட்டின் அருகே உள்ள நிஷாந்தின் வீட்டுக் காம்பவுண்டு பகுதியில் வாழைமரம் ஒன்று வளர்ந்துள்ளது. இந்த மரம் காய்ந்து அதன் இலைகள் நிஷாந்தின் வீட்டிற்குள் விழுந்ததையடுத்து, நிஷாந்த் கந்தசாமியிடம் அதை அகற்றும்படி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் உருவானது.
சம்பவத்தன்று, நிஷாந்தின் மனைவி சிந்துஜா (வயது 30) தனது வீட்டின் வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த நேரத்தில், கந்தசாமி திடீரென கையில் அரிவாளுடன் வந்து, அந்த பெண்ணை பின்னால் நின்று தாக்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிந்துஜா தப்பியோட முயன்றபோதும், கந்தசாமி அவரை துரத்தி சென்று மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்கும்போதே, "வாழைமரத்தின் இலைகளை ஏன் வெட்டினாய்?" எனக் கூறியதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர். சிந்துஜா பலத்த காயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்ததையடுத்து கந்தசாமி தன் வீட்டிற்குள் ஓடிச் சென்று மறைந்துள்ளார்.
தாக்குதலால் சிந்துஜா தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thoothukudi
— Michael (@ngm_diesel) May 24, 2025
Tuticorin
இளம்பெண்ணை அரிவாளால் விரட்டி விரட்டி வெட்டிய முதியவர் pic.twitter.com/NrWTvxJrsv