பச்சிளம் குழந்தையை கடத்திய தகப்பன்: பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்த போலீசார்..!

பச்சிளம் குழந்தையை கடத்திய தகப்பன்: பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்த போலீசார்..!



The father who abducted the infant child was safely rescued by the police and handed over to the mother

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆசிகா. இவரது கணவர் ஆதில். இந்த தம்பதியினருக்கு பிறந்து 2 வாரங்களே ஆன குழந்தை உள்ளது. அந்த குழந்தையை ஆதில் கடத்தியதாக கடந்த 22 ஆம் தேதி சேவயூர் காவல் நிலையத்தில் ஆசிகா புகார் அளித்துள்ளர். அந்த புகாரில், தனக்கும் கணவர் ஆதிலுக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த கணவர் தனது பச்சிளங்குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆதில் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடிவந்தனர். இது குறித்த விசாரணையில், ஆதில் தனது குழந்தையை கோழிக்கோட்டில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. தகவலறிந்து உஷாரான காவல்துறையினர் ஆதிலை பிடிக்க ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, சுல்தான்பத்தேரி பகுதியில் ஆதிலை மடக்கி பிடித்த காவல்துறையின,ர் ஆதிலிடம் இருந்து பச்சிளங்குழந்தையை மீட்டனர். குழந்தை பிறந்து 2 வாரங்களே ஆகியிருந்ததால் தாய்ப்பாலுக்கு ஏங்கி அழுதது. அந்த குழந்தையை மீட்க சென்ற குழுவில் இருந்த ரம்யா என்ற பெண் காவலர், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்தார்.

பெண் காவலர் ரம்யா தாய்ப்பால் கொடுத்ததும் அந்த குழந்தை அழுகையை நிறுத்தியது. அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவலரின் மனிதாபிமான செயலை உயரதிகாரிகள் பாராட்டினர். இதனையடுத்து குழந்தை ஆசிகாவிடம் ஓப்படைக்கப்பட்டது.