வாட்சப் நிறுவனத்திற்கு புதிய சிக்கல்! இந்தியாவில் சேவை தொடருமா?

வாட்சப் நிறுவனத்திற்கு புதிய சிக்கல்! இந்தியாவில் சேவை தொடருமா?


the-existence-of-whatsapp-is-questioned-due-to-regulati

உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1.5 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ள வாட்சப் பினை உலகம் முழுவதும் 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா தான் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகிறது.

இத்தனை வாடிக்கையாளர்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் கவர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது அதில் பயன்படுத்தப்படும் end-to-end encryption எனப்படும் தொழில்நுட்பம்தான். இதன் மூலம் ஒருவர் அனுப்பும் மெசேஜை அனுப்பும் நபர் மற்றும் அதனைப் பெறும் நபர் மட்டுமே படிக்க முடியும். வாட்ஸ்ஆப் நிறுவனம் நினைத்தால்கூட அந்த மெசேஜ்களை படிக்க முடியாது. இதனால் தனிநபரின் பாதுகாப்பானது வாட்ஸ்அப் செயலியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

Whatsapp

ஆனால் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படும் இந்த பாதுகாப்பு அம்சமானது இந்திய அரசிற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. காரணம், வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகள் குறித்தும் குற்றப்பின்னணிகளுக்காக பரிமாறப்படும் தகவல்களை கண்காணிப்பதிலும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என இந்திய அரசு வாட்சப்  நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவர் கார்ல் வூக், "இந்திய அரசு விடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றினால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும். வாட்சப் செயலியானது தனிநபர்களின் சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு தளர்த்தப்பட்டால் நிச்சயம் வாட்சப் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்படக்கூடும். தனிநபரின் செயல்பாடுகளை மற்றவர்கள் கண்காணிக்க முடியும் எனில் அந்த செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறையக்கூடும். எனவே இந்திய அரசின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன" என தெரிவித்துள்ளார்.

Whatsapp

இது குறித்து மேலும் விளக்கம் அளித்துள்ள இந்திய தகவல் தொடர்பு ஆணையம், "தனிநபர்கள் அனுப்பும் மெசேஜை படிக்கும் வசதியை ஏற்படுத்தி தர தேவையில்லை. மாறாக வதந்திகள் பரவும் போது அந்த வதந்தியானது யாரிடமிருந்து ஆரம்பிக்கப்பட்டது என்பதை கண்டறியும் வசதியை மட்டும் ஏற்பாடு செய்து தந்தால் போதும்" என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுபோன்று அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தால் இந்தியாவில் வாட்சப் சேவை தொடருமா? என்ற கேள்விக்கு, "அதனைப் பற்றி முடிவு செய்ய நிச்சயம் ஒரு நாள் வரும்" என அதன் இந்திய தலைவர் கார்ல் வூக் தெரிவித்துள்ளார். இதனால் இந்திய சந்தையில் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் நிலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.