பிறந்தநாள் பார்ட்டி: சிறுமிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை? அரசியல் பிரமுகர் மகன் கைது
பிறந்தநாள் பார்ட்டி: சிறுமிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை? அரசியல் பிரமுகர் மகன் கைது
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் தனது பிறந்த நாள் விழவை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவிற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி சென்றுள்ளார். பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பியபோது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உள்ளூர் சுடுகாட்டில் அவசரமாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விருந்தில் மது அருந்தும்படி வற்புறுத்தப்பட்டதாகவும், ஒரு பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆண்களால் அவர் வீட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் சோஹல் தன்னை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டிய நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சோஹலை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில், அவரது தந்தையும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான சமர் தனது குடும்பத்தினருடன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.