குழந்தை பிறக்க மாந்திரீக பூஜை செய்து; மனித எலும்பு தூளை மருமகளை சாப்பிட வைத்த கொடுமை..!



Perform magical pooja for child birth; The cruelty of making daughter-in-law eat human bone powder..

2019-ஆம் வருடம் புனேவில் வசிக்கும் 29 வயது பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. கம்ப்யூட்டர் இன்ஜினியரான அந்த பெண்ணை ஆரம்பத்தில் இருந்தே அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை செய்யத் தொடங்கியுள்ளனர். திருமணமான அடுத்த வருடமே கொரோனா பெருந்தொற்று வந்ததால் அவரது குடும்பம் பொருளாதார கஷ்டத்தில் இருந்துள்ளது. 

இதனால், வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தி அவரது தந்தையிடம் நகை, பணம் என வாங்கியுள்ளனர். மேலும், பெண்ணின் கணவர் குடும்பத்தினர் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்துள்ளனர். திருமணம் நடந்து நான்கு வருடங்களாகியும் பெண் கருத்தரிக்கவில்லை என்பதால் அது தொடர்பாக மாந்திரீக காரியங்களை செய்துள்ளனர். 

மந்திரவாதியை அழைத்து வந்து வீட்டில் மனித எலும்புகளை வைத்து மாந்திரீக பூஜைகளை செய்துள்ளனர். அதன் பிறகு, அந்த எலும்புகளை உடைத்து சம்பல் போல தூளாக்கி அந்த பெண்ணை சாப்பிட சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளனர். அந்த பெண் சாப்பிட மறுத்தபோது தலையில் துப்பாக்கி வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி சாப்பிட வைத்துள்ளனர். 

இதுபோன்ற பல கொடுமைகளுக்கு ஆளான அந்த பெண் கடந்த வருடம் மே மாதம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அந்த பெண் மகளிர் ஆணையம் மற்றும் புனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் பெண்ணின் கணவர், அவரது உறவினர்கள், மந்திரவாதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை கூறியுள்ளது.