தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடுகிறதா சமூக வலைதள பிரச்சாரம்..?

சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்படும் அரசியல் கருத்துகள், கட்சி சார்ந்த விளம்பரங்களை தடை செய்ய இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போதிலிருந்தே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் யார்? யாருடன் கூட்டணி அமைப்பது என்பன உள்ளிட்ட தேர்தல் வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளன கட்சிகள்.
கூட்டணியை உறுதி செய்துள்ள கட்சியினர் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர், வாட்சப் போன்ற சமூகவலைதளங்களில் தெறிக்கவிடும் அரசியல் கருத்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரவில் உள்ள மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சாகர் சூர்யவன்ஷி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதாவது, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பிருந்து, தேர்தல் விளம்பரங்கள், அரசியல் கருத்துகள் வெளியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதிகள் நரேஷ் பட்டீல், ஜாம்தார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜரானார். அவர் வாதிடுகையில், அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து விளம்பரங்களோ, பிரசாரமோ செய்யக்கூடாது என்று ஏற்கனவே விதி உள்ளது.
ஆனால் தனிநபர் ஒருவர் தனது வலைப்பதிவிலோ, டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலோ தனிப்பட்ட முறையில் எதிராகவோ, ஆதரவாகவோ கருத்து தெரிவித்தால் அதனை தேர்தல் ஆணையத்தால் எப்படி தடுக்க முடியும்? என்று குறிப்பிட்டார். இதனால் இந்த வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.