தேர்தலில் தோற்றாலும் கொரோனா குறித்து நல்ல செய்தியை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

தேர்தலில் தோற்றாலும் கொரோனா குறித்து நல்ல செய்தியை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்.!



donald-trump-talk-about-corona-vaccine

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். 

இந்தநிலையில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், ஜனவரி 20ம் தேதி பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது பதவியை துறக்கும் முன்பாக, பல அதிரடிகளை அரங்கேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு எதிராகவும், ஈரானுக்கு எதிராகவும் பல முக்கிய முடிவுகளில் அவர் கையெழுத்திடவும் வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.

தற்போதைய அதிபர் குறைவான வாக்குகளை பெற்றதற்கு சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. தேர்தல் பிரசாரத்தின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் தடுப்பூசி விரைவில் தயாராகிவிடும் என வாக்குறுதி கொடுத்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆனால், அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரியவரும் வரை கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்கள் வெளிவராமல் இருந்தது. இந்தநிலையில், அமெரிக்காவின் பிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி நேற்று வெளியானது. அந்த தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது எனவும், அந்த தடுப்பூசியால் மிகப்பெரிய அளவில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் பங்குச்சந்தையில் பிப்சர் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, தடுப்பூசி மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது. தடுப்பூசி 90 சதவீதம் பலனளிக்கிறது. இது மிகவும் நல்ல செய்தி" என தெரிவித்துள்ளார்.