கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை! 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

டெல்லி, தெலுங்கானாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஐரோப்பியா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் வரை பரவியுள்ளது. இதனால் உலக அளவில் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கேரள மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர்.
இந்த நிலையில், மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கும், தெலங்கானவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.