தீபாவளி சமயத்தில் திறக்கப்படும் திரையரங்குகள்! ஆனால் சோகத்தில் ரசிகர்கள்!

தீபாவளி சமயத்தில் திறக்கப்படும் திரையரங்குகள்! ஆனால் சோகத்தில் ரசிகர்கள்!


new-movie-not-release-in-theatre

கொரோனா பரவல் காரணமாக  திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைத்துறையை சார்ந்த பலரும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகின்றனர்.

இந்தநிலையில் சமீபத்தில் அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி அளித்தது. இந்தநிலையில் 7 மாதங்களுக்கு பிறகு பெரிய எதிர்பார்ப்போடு தமிழ்நாடு முழுவதும் இன்று செவ்வாய் கிழமை திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. ஆனால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது தொடா்பான எந்த அறிவிப்பும் இல்லாததால், பல இடங்களில் சிறிய திரையரங்குகள் மட்டுமே இன்று திறக்கப்படுகின்றன.

theatre

பொதுவாக பல திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படுவது வழக்கம். மேலும் தற்போது தீபாவளி பண்டிகையும் வருகிறது. ஆனால் வி.பி.எப் கட்டண பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், புதிய படங்கள் வெளியாகாத நிலையில் ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்தநிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும். வி.பி.எப். தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அரசு ஏற்பாடு செய்யும் என தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இந்தவருட தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகுமா? என்று ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.