பெண் காவலர் தற்கொலையில் திருப்பம்.. கணவர் கைது.. நடந்தது என்ன?
பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் திருமண தம்பதி:
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு பெண் காவலராக பணியாற்றி வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (29), காவல் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணவர் சிலம்பரசன் (32), ஆவடி சிறப்பு காவல்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த போலீஸ் தம்பதி, எழும்பூர் காவல் நிலையம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!
மனைவி மீது தாக்குதல்:
புவனேஸ்வரி, திருமணத்திற்கு முன்பு தனக்கு தெரிந்த ஒருவரிடம் ரூ.60 ஆயிரம் கடனாக வாங்கியதாகவும், அந்தத் தொகையை தனது சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் திருப்பிச் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்துக்கு முந்தைய இரவு, மதுபோதையில் வீட்டுக்கு வந்த சிலம்பரசன், கடன் விவகாரம் தொடர்பாக புவனேஸ்வரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தூக்கில் தொங்கினார்:
இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி, வீட்டின் ஒரு அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அதே இரவு முன்பக்க அறையில் தூங்கியிருந்த சிலம்பரசன், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தாய் புகார்:
இதற்கிடையில், புவனேஸ்வரியின் தாய் அன்புக்கரசி, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழும்பூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில், திருமணமான நாள் முதலே சிலம்பரசன் மதுபோதையில் மகளை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், வரதட்சணை கேட்டு பலமுறை கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சம்பவத்திற்கு முந்தைய இரவு, புவனேஸ்வரி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரூ.2 லட்சம் தரும்படி கேட்டதாகவும், கணவர் நிலம் வாங்குவதற்காக பணம் கேட்டதாக அழுதபடி கூறியதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
கணவர் கைது:
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, புவனேஸ்வரியின் கணவர் சிலம்பரசனை கைது செய்துள்ளனர்.