'நெடுஞ்சாலை' திரைப்பட பாணியில் ஸ்கெட்ச் போட்டு திருட்டு.. டெம்போ ட்ராவலர் கொள்ளையில் 9 பேர் டீம்..! பகீர் தகவல்.!
'நெடுஞ்சாலை' திரைப்பட பாணியில் ஸ்கெட்ச் போட்டு திருட்டு.. டெம்போ ட்ராவலர் கொள்ளையில் 9 பேர் டீம்..! பகீர் தகவல்.!
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல பரபரப்பு தகவலும் கிடைத்துள்ளன.
சென்னையில் உள்ள வில்லிவாக்கத்தில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் குடும்பத்தினரோடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், புதூரில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்காக டெம்போ ட்ராவலர் வேனில் சென்றுகொண்டு இருந்த நிலையில், வேனின் மேல்புறத்தில் 6 சூட்கேஸ்களை வைத்து கயிற்றால் கட்டி பயணம் செய்துளளனர். இந்த நிலையில், இதில் 2 சூட்கேஸ்கள் மாயமான நிலையில், அதில் 264 சவரன் நகைகள் இருந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 6 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர். இவர்கள் விக்கிரவாண்டி பனையபுரம் பகுதியில், அதிகாலை நேரத்தில் தேநீர் குடிக்க வாகனத்தை நிறுத்தியபோது பெட்டிகள் மாயமானது உறுதியானது. இதனையடுத்து, உளுந்தூர்பேட்டை முதல் செங்குறிச்சி வரை உள்ள கடைகளில் இருக்கும் சி.சி.டி.வி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, நம்பர் பிளேட் இல்லாத ஸ்கார்பியோ மற்றும் டாடா ஏஸ் வாகனம் டெம்போ ட்ராவலரை பின்தொடர்ந்து சென்றது தெரியவந்தது.
இரண்டு வாகனத்தையும் அதிகாரிகள் தேடிவந்த நிலையில், சோழவந்தான் குருவித்துறை பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் மேற்கூறிய அடையாளத்துடன் வாகனம் நின்றுள்ளது. இதனையடுத்து, டாஸ்மாக்குள் அதிகாரிகள் சென்றபோது, காவல்துறையினரை பார்த்து பதறிப்போன கும்பல் நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தது. அதிகாரிகள் விரட்டிச்சென்று கும்பலை சேர்ந்த குருவித்துறை வினோத், உசிலம்பட்டி கணேசன் (டாடா ஏஸ் ஓட்டுநர்) ஆகியோரை கைது செய்தனர்.
இருவரையும் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் மொத்தமாக 9 பேர் கும்பல் என்பது உறுதியானது. மேலும், வெளிநாட்டில் இருந்து வரும் வசதியுள்ளோர்களின் வாகனத்தை குறிவைத்து திரைப்பட பாணியில் பணம் மற்றும் நகையை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சம்பவத்தன்று வெளிநாட்டு பயணிகளின் வாகனம் கண்களில் சிக்காத நிலையில், பெரியசாமி வந்த வாகனத்தை பார்த்துள்ளனர். அவர்களின் வாகனம் கிளம்பியதும் ஸ்கார்பியோ காரில் முந்திச்செல்வது போல பாவனை காண்பித்து, டாட்டா ஏஸ் வாகனத்தில் சூட்கேஸை திருடி பண்ரூட்டி தப்பி சென்றுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து 264 சவரன் நகைகள் மற்றும் டாடா ஏஸ், ஸ்கார்பியோ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ளோருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.