சொந்த காசை போட்ட அதிகாரிகளுக்கு எல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய்! பறந்தது அதிரடி உத்தரவு...!!!
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது ஏற்படும் செலவுகளை சமாளிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு ரூ.6.85 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வரவேற்பு, உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கான செலவுகளை அதிகாரிகள் முன்கூட்டியே மேற்கொள்ள முடியும்.
அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிதிச்சுமைக்கு தீர்வு
இதுவரை VVIP வருகைகளுக்கான செலவுகளுக்கு உடனடியாக தனி நிதி கிடைக்காததால் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தன. பந்தல் அமைப்பாளர்கள், உணவு விநியோகஸ்தர்கள், வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கான கட்டணங்களை உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலையும் இருந்தது.
சில நேரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் களப்பணியில் இருந்த அதிகாரிகள் தங்களது சொந்தப் பணத்தைக் கூட செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான அவர்களின் ஆதங்கம் இடம்பெற்ற வீடியோக்கள் இணையத்தில் பரவி கவனம் பெற்ற நிலையில், அரசு இந்த நடைமுறை சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண முடிவு செய்தது.
8 மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம்
2026-27 நிதியாண்டுக்கான இந்த நிதி, முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்களைத் தவிர்த்து குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய-மாநில உயரதிகாரிகள், சர்வதேச பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் வருகைக்கான செலவுகளுக்கு பயன்படுத்தப்படும்.
மாவட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் அங்கு வருகை தரும் பிரமுகர்களின் சராசரி எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிதி பகிரப்பட்டுள்ளது. கோவை, கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு
திருநெல்வேலி, சேலம், ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான பணத்தை உடனடியாக செலுத்துவதுடன், சிறு வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகைகள் தாமதமின்றி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகங்களின் கைகளில் முன்கூட்டியே நிதி இருப்பதன் மூலம் VVIP வருகைக்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்ள முடியும். நீண்ட காலமாக நிலவி வந்த நடைமுறைச் சிக்கலுக்கு மாவட்ட வாரியான நிதி ஒதுக்கீடு மூலம் தீர்வு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இப்படி ஒரு காரணமா? திரிஷாவுக்குத் இதில் தலையீடு உள்ளதோ... அர்ச்சனா கல்பாத்தி நியமனத்தில் வெடித்த பூகம்பம்! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு!!!